எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday 25 January 2017

ஈசன் சொல்

ஈசன் என்றொரு பெயராலும் - இந்த
மானுடர் என்னைச் சுட்டிடுவார் - நான்
வேறு என்றவர் எண்ணிடுவார்

என்னை வணங்குதல் ஏனென்றே - இங்கு
வணங்கும் பலரும் தெளியாதார் - அவர்
தெளிந்தோர் சொல்லும் கேளாதார்


தென்னை மரமாய் உயர்வதுவும் - சில
பயிர்கள் செடியாய் நிற்பதுவும் - தம்
இயல்பின் படியே என்றறிக

திருட்டும் புரட்டும் தவறாமே - எனக்கு
நன்மை தீமை பிரிவில்லை - மாந்தர்
வினைத்ததன் பயனை வாழ்கின்றார்

















நல்லன அல்லன பகுத்திங்கே - வினை
பலவும் புரியும் மாந்தர்கள் - அதன்
எதிர்வினை தாங்கி வாழ்வாரே

உம்வினை அதனின் எதிர்வினை - இந்தச்
சங்கிலித் தொடரில் உழல்கின்றீர் - எனை
அல்லன நேர்ந்தால் பழிக்கின்றீர்!

என்னைக் கேள்விகள் கேட்காதீர் - உமது
மனதின் உள்ளே துழாவுதலே - நீவிர்
உம்மை அறிவதின் ஆரம்பம்

சற்றே உம்மை உணர்கையிலே - இங்கு
உயிர்கள் ஒன்றே  என்கின்ற - அழியா
மெய்மை உணர்வீர் கொள்.

- பார்வதேயன்.

No comments:

Post a Comment