எச்சரிக்கை

எச்சரிக்கை

Friday 17 December 2010

கோடி பெறும் பாடல்

தமிழ் தேடி வலையில் மேய்ந்த போது கிடைத்த ஔவையின் அளப்பரிய பாடல் ஒன்று.

நிகழ்வு:

சோழ மன்னன் ஒருவன் தனது அவைப் புலவர்களை அழைத்து, “நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்” என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அவ்வழியே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, "இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் இயற்றுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் கொடுங்கள்" என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.

அந்த நாலு கோடிக்கு இணையான ஒரு பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும் 
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெறும் 
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும் 
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்
-ஔவையார்.

பொருள்:

நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்

உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.



(இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எந்தச் செயல் இணையாகும் என்று தெரியவில்லை!)

1 comment:

  1. \\இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எந்தச் செயல் இணையாகும் என்று தெரியவில்லை!\\
    வருகிற தேர்தல்ல நாம தேர்ந்தெடுக்க போகும் கட்சி தான்

    ReplyDelete