எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday 25 December 2013

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்






பேரிடர் இவனென்று பேச்சுக்கள் சூழ்ந்திருக்க
பெருஞ்செயல் பலவாலே பெருமைகள் மீட்டனன்
நம்பிய ஜெயவாக்கினி நமக்கில்லை என்றபோது
நாற்காலி காத்திட நாணமின்றிக் கெஞ்சவில்லை

காவியே ஆகாதென்று காதங்கள் ஓடியோர்
கால்கடுக்க வரிசையில் காத்திருந்து அதரிக்க
நாழிகை தாண்டாதென்று நாப்பிளக்கப் பேசியோர்
நாணத்தில் வாய்மூட நாட்டை வளர்த்தானே




ஆறாண்டு காலங்கள் ஆக்கத்தின் பொற்காலம்
ஆசற நலங்காத்து ஆக்கங்கள் பலசெய்து
ஆரிருள் உய்த்தநாட்டை ஆரியங் கொளச்செய்து
ஆழிசூழ் உலகில்நாடு ஆக்கத்தில் நிமிரச்செய்தான்



 விளம்பரங்கள் பிடிக்காது வீண்செலவு என்றதனால்
விண்முட்டும் சாதனைகள் வீணென்று வைரிகள்
விழிபிதுங்கப் பொய்யுரைத்து வீணர்கள் கைகோர்த்து
விசுவத்தின் உத்தமனை வீழ்திவிட்டுக் கொக்கரித்தார்

 

சேவகர்கள் வீழ்வதில்லை செய்தபணி சாவதில்லை
சேவையது கடமையாம் செருக்கெதுவும் தேவையில்லை
சேவையாற்ற நரேந்திரன் செம்மையாய் மிளிர்ந்திடவெ
சேதுநாதன் பாதம்நோக்கி செம்மைத்தவம் புரிகின்றான்.

No comments:

Post a Comment