எச்சரிக்கை

எச்சரிக்கை
Showing posts with label எம் கவிதை. Show all posts
Showing posts with label எம் கவிதை. Show all posts

Thursday, 14 January 2016

உவகைப் பெருதினம் தை

மனத்தின் மாசுகள் மண்ணொடு போக
நிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்க
புகையாய் வானில் புண்ணியம் பெருகிப்
பொங்கி வருவதே தை

Saturday, 22 August 2015

காதலில் கசியும் காலத்திலும் கையில்
சங்கு சக்கரம் சகிதமாய் விளங்கும்
காக்கும் கடவுள் காட்டுகிற சேதி
கணமும் மறவாதே கடமை.

Thursday, 23 April 2015

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்

Sunday, 13 July 2014

தனிப்பாடல்


ஆண்டுகளாய் நகரத்தில் பழகிய திறமெல்லாம்
காலியான பிறன்மனையில் அல்லும் பகலுமாய்
ஓங்கி உலகளக்கும் உயரத்தை இலக்காக்கிக்
குப்பை கொட்டுவதே காண்.

(நகரத்தில் மிகும் குப்பைகள் குறித்தெழுதியது) - நவம்பர் 2013


செருப்புக்கும் காசின்றி கால்கடுக்க நடப்பவர்கள்
சோகமழிக்கக் கைக்காசு செலவழிக்கும் ஆமாத்மி
சேர்த்தகாசு கருப்பா மிவர்கையில் - அதிகாரம்
சேர்ந்தால் என்னாகும் கேட்கிறேன் விளக்குமாறே...

(ஆம் ஆத்மி கட்சி பல தில்லுமுல்லுகளினூடே தில்லியில் டிசம்பர் 2013 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து)





கூட்டெனச் சிலகூகைகள் மறைந்துகூவும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
மாநிலத்து தலைவரெலாம் மாய்ந்து மறுத்ததாலேயே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
உறவு என்பதில்லையென்று ராஜநாதர் சொன்னதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
தனித்துநின்று தமிழகத்தில் குறைவாய் வெல்லும்போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
தொன்மதத் தெழுச்சிவேண்டி மாந்தர்கூடி நிற்பதால்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..

(2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்த போது எழுதியது)

சிறுபான்மை வால்பிடித்து மதங்கொண்டு உளறிவரும்
குறுமனத்துக் சிறுதனத்தி லிதங்கொள்ளும் மூர்த்தியவர்
மோடியின்பால் தற்காலம் மேடைகளில் பொழியுமன்பு
வாடியதம் செல்வாக்கைக் கூடியிடும் போட்டியினால்
குலையாது வைத்திருந்து மலைபோலத் தான்குவித்த
விலைபெற்ற செல்வத்தைக் கலையாது காத்திடவே.


வாஜ்பாய் காலத்து பாஜக மோடி காலத்தில் இல்லை.  ஆகவே கூட்டணி கிடையாது என்று கூறிய கருணாநிதி, அதே நாளில் பாஜக அழைத்தால் சேருவோம் என்றும் மோடி மிக நல்லவர் என்றும் கூறிய போது எழுதியது. 2013 டிசம்பர்.

மாமலையை மடுவாக்கி மடுவினையே மேடுறுத்தி
மாபணிகள் செய்திடுவான் மாதவனைப் போற்றுவதும்
மாநிலத்தில் நம்பணியாம் மாண்பைக் காப்பதுநில
மாதாவைக் காப்பதுவாம் மாந்தரே தெளிந்திடுவீர்

இந்துவுக்கு விழிப்புணர்வு இங்குமிகத் தேவையது
இந்தப்பணி செய்வதிலே இனிசுணங்க ஏலாது
இட்டவனோ எம்மிறைவன் இங்கவனே முதலாளி
இதிலேதும் மாற்றமில்லை இங்கார்க்கு முரைத்திடுவேன்

மாதவனின் பாதையிலே மாவிடர்கள் புதிதுமல்ல
மாமனிதன் கேசவனின் மாபடையோ பேடியில்லை
மாநிலத்தில் சநாதனத்தை மேன்மையுறச் செய்வதற்கு
மாநிலத்தின் தாயவளே மனமுவந்து அருள்செய்வாள்


(ஹிந்துக்களை ஏகடியம் செய்து வீரபாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சும் அதன் பின் நடந்த கொடும் அரசியல் வித்தைகளைப் பார்த்து வருத்தத்தில் எழுதியது)

இங்கத்திய சூனியத்துக்கு இல்லாதது ஞானமொன்றே
இங்கிருக்கும் சிக்கலுக்கு இதுவெனப் புரிதலின்றி
இவர்தரும் தீர்வுகளோ இளித்திடும் பித்தளையாம்
இன்னுமா நம்புவருலகில் இவரனைய நாடகமாடியை

இவர்தீற்றிய வரைவொன்றுக் கில்லாத காப்புரிமை 
இருப்பதாகக் கூறியிவர் இல்லாத மீசைமுறுக்கி
இருந்தால் காட்டுமென இங்குபலர் கேட்டபின்னே
இதோதந்தேன் நாட்டுக்கு இங்காரும் பயன்பெறுவீர்

என்றபெரு நாடகத்தை எம்மிடையே அரங்கேற்றி
என்றுமிலாப் பெருமையை எதிர்பார்த்து அரங்கேற
என்னதான் கிடைத்ததுவோ என்றுற்று நோக்குங்கால்
எக்காள நாடகமிதே எனத்தெளிவு வந்ததுவே!

எங்கோ மேற்கினிலே எங்கெல்சும் மார்க்சுமாக 
எக்காலமும் கவைக்குதவா எண்ணத்தைக் கைக்கொண்டு
எழுதிவைத்த தத்துப்பித்தை எம்மீது திணிக்கவரும்
எகத்தாளக் கம்யூனிஸ்டு என்றிவரைத் தெளிவீரே.


(தன் ஓவியத்துக்கு வாங்காத காப்புரிமையைக் கொண்டாடிவந்த ஞாநி, எங்கே காட்டு காப்புரிமையை என்று கேட்டதும் தந்தேன் ஓவியத்தை நாட்டுக்கு என்று பின்வாங்கி அடித்த குட்டிக்கரணம் கண்டு சிரித்துக் கொண்டே 11/01/2014ல் எழுதியது)

குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பு. - செய்தி.

கண்கள்பனித்து இதயமினித்த கசப்புமருந்தின் சுவையே
மண்மீதுசிலர் ஜனநாயகத்தை ஆட்டுவிப்பதொரு கலையே
மணிமேகலை யுனக்கறிவாயலத்து முகப்பிலேயொரு சிலையே
கனியென்றமகள் திகாரென்றசிறை செல்லாதிருக்க விலையே


(காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தபின் குலாம் நபி ஆசாத்துடன் சந்திப்பும் நீண்டகாலத்துக் கூட்டணி என்ற அவரது கருத்தும் அதற்கு கருணாநிதி மறுப்பேதும் தெரிவிக்காததும் கண்டு 09/01/2014ல் எழுதியது.)
 
தைதை எனக்குதித்தாலும் தையிலே புத்தாண்டென்று
கைபிடித்த பெண்களும் கைகோர்க்கார் இவரொடு
வையகத்து வழக்கப்படி வைத்திடும் பொங்கலிலும்
கைவிரலில் தொட்டுத்தரும் கையறு நிலையவர்க்கு

பைநிறையக் காசுதரும் பைத்தியத் தொண்டர்களோ
வைகாசி என்றதுமே வையாது குவித்திடுவர்
கைபார்த்துச் சொல்லும் கைகளைப் பற்றியேதம்
வைப்புநிதி காத்திடவே வையகத்தை விற்குமிவர்

முத்தமிழை விற்றாரது முக்காலும் சத்தியமே
புரிதல் ஏதுமின்றி புலமையற்று மொழிந்துவந்த
சும்பப்பாழ் நாத்திகரொடு சுற்றித் திரிந்தழிந்து

முற்றும் மூடர்சூழ முன்னின்ற கதைகேளீர்!

(முத்தமிழ் வித்தவர், சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு ஆகிய நூல்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது குறித்து 14/01/2014 அன்று எழுதியது)

Wednesday, 25 December 2013

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்





Thursday, 5 December 2013

இராம ராஜ்ஜியமே லட்சியம்

பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும்
பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற
பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து
பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே

Thursday, 24 October 2013

தேச குருவுக்கு வணக்கம்!

விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை.

நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கி
நல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்
நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்ட
நேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே


Wednesday, 25 September 2013

காவியம் பாடுவோம்

காற்றில் பளபளக்குது காவித் தோரணம்
காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும்
கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை
கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை


Saturday, 20 July 2013

அரனருளோடு அரணாவோம்


நாட்டைத் துண்டாடும் நாசகாரர் செயலால்
கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை
நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக்
களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை

Sunday, 5 May 2013

ஈழத்துக்கு இரங்கற்பா - இப்போது ஏனப்பா?

ஈழத்துச் சாவுகுறித்து ஈரமிக்க கண்களுடன்
இங்கத்திய கவிவாலி கவிதை புனைந்துள்ளார்
எண்ணாறு மாதங்கள் காத்திருந்து கவிபுனைய
என்னதான் காரணம் என்றேயவர் சொல்லவில்லை

Thursday, 22 November 2012

சாதிகள் எங்கும் உண்டு,

 இசுலாமிய நண்பர் ஒருவர் அம்மதத்தில் சாதிகள் இல்லை என்றும் அடக்குமுறைகள் இல்லை என்றும் பொயுரைத்து மதமாற்ற ஊக்கம் போன்றதொரு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். சாதிகள் இருக்குதடி பாப்பா என்று மகாகவியை வேறு திரித்துத் துணை கொண்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மூன்று நிமிடங்களில் எழுதி முகநூலில் தந்ததோடு இங்கே சற்றே விரிவு செய்து பகிர்கிறேன். 

Sunday, 19 August 2012

ஈழோத்ஸவ கான மஞ்சரி

தீன கருணாகரனே ராஜபக்‌ஷே லங்கைத் தலைவனே!
ஈழப் போரது முடிந்தபோதும்,
ஈழம் தனியே இல்லை எனினும்
ஈழம்காட்டிப் பிழைக்கும் நிலை எமக்கே
லங்கைத் தலைவனே ஐயா.. லங்கைத் தலைவனே!!
(தீன)

Monday, 16 July 2012

குருவடி வணங்குதும்

குருவே இறையை உணர்த்துவர் அவரையே
முதலில் வணங்குதல் முறை.

குருவின் கருணை பெரிதாம் பணிவே
அதனில் திளைக்கும் வழி.

சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல்
குருவின் திறமே காண்.

குருதரும் ஞானம் அடையத் தேர்ந்திடல்
சீடனின் திறமாம் தெளி.

Friday, 15 June 2012

வருக நீர் எம்மான்!


ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக
ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை
ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும்
ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ?

Friday, 25 May 2012

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே
பெட்ரோல் விலை ஏற்றம்.

வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி
விலையிலே நிகழ்தல் சாபம்.

Thursday, 24 May 2012

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும்
குருவின் வாக்கே வளமை கூட்டிடும்
குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால் 
குருவை வணங்குதல் தலை.
 
பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்
பாரதம் போற்றிடும் ஞானத்திரு வடிவம்
மறைபொருள் உணர்ந்த மனமோ ஸ்படிகம்
மந்திரம் நீர்வாழும் தலம்.

Friday, 11 May 2012

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்
             உன்னருள் வேண்டு கின்றேன்
 அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்
             வற்றாத பொருள் வேண்டுமே!



Sunday, 6 May 2012

கவிஞன் வாக்கு

கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம்
சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன்
இருளை விரட்ட ஒளியும் தருவேன்
இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால்
இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ.

எம்வழி யதுவோ  இறைவன் தந்தது
எம்பணி எல்லா மவனைச் சார்ந்தது
எழுச்சி தந்தவன் துணிவும் தந்தனன்
எம்முயிர் கலந்த துணிவின் துணையால்
எமர்வாழ வழிசெய அருளும் தந்தான்.

பணம்தரும் பணிகள் பலவும் செய்வேன்
பொருளை எமர்நலம் வாழத் தருவேன்
துன்பம் சூழ்ந்த மாந்தர் சிறக்கத்
துணையாய் நிற்க இறைவனைப் பணிப்பேன்
எனதன் பிறைவனும் அதுவே செய்வான்

உலகில் எங்கோ மூலையில் இருப்பினும்
ஊக்கம் வற்றா துழைக்கும் மக்கள்
உலகம் வாழத் தம்சுகம் குறைத்து
ஊற்றாய் நன்மை பெருக்கும் மாந்தர்
உளமகிழச் செய்தல் உற்றதோர் பணியாம்

இறையை உணர்ந்தோர் எமரே யாவர்
இறைப்பணி  செய்யும் எமரே பெரியோர்
இறையை வாழ்த்தித் தம்மின்பம் குறைத்து
இம்மையும் சிறக்க வழிசெயும் சான்றோர்
இமயம் மிஞ்சும் திறமும் கொண்டோர்.

எமர்வழி எம்மொழி வாழ்க்கை விதிகள்
எள்ளல் செய்தே யார் நகைத்தாலும்
எமை நகையாடியே யார் பிழைத்தாலும்
எள்ளும் நீரும் இல்லா நிலைக்கு
எம்மிறை யாக்கும் எச்சரிக்கை இதுவே...

வஞ்சனை சூது சகுனிப் பேச்சால்
வக்கற்ற சிலரது சூழ்ச்சியின் பேரால்
வயிற்றில் எரிச்சலால் எமரை வைது
வயிற்றுப் பிழைப்பை நடத்தும் மாக்கள்
வயிற்றில் பிறப்போர் விளங்குதல் கடினம்


வாழ்க்கை என்பது குறுகிய காலம்
வாழ்ந்து அமைதியைத் தேடும் படலம்
வாழும் முறைமை குலைந்த இக்காலம்
வாழ்வாங்கு வாழ வழிசொல ஏற்றோர்
வாழ்வின் சாரம் உணர்ந்த எமரே!!

-பார்வதேயன்.

Wednesday, 26 January 2011

செவி கொடு பராசக்தி!

காணி நிலமும் கவின்மிகு வீடும்
காற்றுதரும் மரமும் கண்குளிர் பசுமையும்
காசும் பணமும் குன்றாச் செல்வமும்
காண்பதற் கெழிலான கட்டழகு மனையாளும்
காதலும் வேண்டுமுன் பராசக்தி உன்னிடம்

Wednesday, 19 January 2011

வேண்டுதல்!

இனிமை கூட்டும் தனிமை வேண்டும்
இன்பம் ஊட்டும் துணையும் வேண்டும்
காலம் பார்க்காது பேசிட வேண்டும்
காலம் முழுதும் தொடர்ந்திட வேண்டும்